கொழும்பில் நடந்த தமிழக-இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி
கொழும்பு: கொழும்பில் இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்கதையாகிவிட்டது. இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களின் வலைகளை கிழித்தெறிவது, படகுகளை பறிமுதல் செய்வது என்று அட்டகாசம் செய்து வருகிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கடந்த ஜனவரி மாதம் சென்னையில் இந்தியா- இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதம் மீண்டும் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்து அது 2 முறை தள்ளிப்போனது.
இந்நிலையில் தான் திங்கட்கிழமை இலங்கை தலைநகர் கொழும்பில் இந்தியா-இலங்கை மீனவர்களுக்கு இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த 17 மீனவ பிரதிநிதிகள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என இந்தியா சார்பில் மொத்தம் 26 பேர் கலந்து கொண்டனர். இலங்கை சார்பில் அதிகாரிகள், மீனவ பிரதிநிதிகள் என 30 பேர் கலந்து கொண்டனர்.
தடை செய்யப்பட்ட மீன் வலைகள், இரட்டை மடிவலைகளை பயன்படுத்தக் கூடாது, எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது என்று இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கை நிராகரிப்பட்டது. இதையடுத்து எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.