இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் முதலாம் ஆண்டு விழா
கொழும்பு: செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கடந்த 19ம் தேதி நடைபெற்றது.
இலங்கையில் நடந்த போரில் செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து செஞ்சோலை சிறுவர் இல்லம் மீள ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த முதலாம் ஆண்டு நிறைவு விழா கடந்த 19ம் தேதி கொண்டாடப்பட்டது.
சிறுவர்களும், நிர்வாகிகளும், செஞ்சோலை குடும்பமும், அன்பு உள்ளங்களும் ஏற்பாடு செய்த இவ்விழாவானது சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட ஆரம்பக் கல்விப்பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.கணேசலிங்கம், உளவளத்துணை உத்தியோகத்தர் திரு. துஸ்யந்தன், கனடாவில் இருந்து வந்திருந்த திரு. இன்பநாயகம், திரு. இராசதுரை, லண்டனில் இருந்து வந்திருந்த வாசு, சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.ராஜன், யாழ் இந்துக் கல்லுாரி ஆசிரியர் திரு. மகிழ்ச்சிகரன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உத்தியோகத்தர் திரு.கோபி, பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விருந்தினர்களுக்கு சிறுவர்களால் பூங்கொத்து கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டு தேசியக் கொடி, செஞ்சோலை கொடி, நெர்டோ(NERDO) கொடி ஏற்றப்பட்டு பின்னர் நிகழ்ச்சி மண்டபத்தில் கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
சிறுவர்கள், விருந்தினர்கள் மத்தியில் செஞ்சோலை இல்லத்தின் தந்தையும், நெர்டோ நிறுவன செயலாளருமான திரு. பத்மநாதன் அவர்கள் வரவேற்புரையை வழங்கினார். அப்போது அவர், உங்கள் முன் நிற்பதற்கும், சிறுவர் இல்லங்களை நடத்துவதற்கும் வாய்பளித்த அன்பு உள்ளங்களுக்கு முதற்கண் நன்றிகளை தெரிவித்தார். தொடர்ந்து 10 சிறார்கள், ஒரு தங்கும் விடுதியுடன் ஆரம்பித்த இச்சிறுவர் இல்லம் தற்போது 88 சிறுவர்கள், 02 தங்கும் விடுதியுடன் வெற்றிகரமாக இயங்க உதவிபுரியும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

இல்லங்களில் அன்பு, ஒழுக்கம், கல்வியுடன் பிள்ளைகளை வளர்த்து வருவதாகவும் இதில் ஓரளவு வெற்றியும் அடைந்ததாக குறிப்பிட்ட தந்தை அவர்கள் இதற்கு உதாரணமாக ஆஸ்திரேலியாவில் இருந்து செஞ்சோலை, பாரதி இல்லங்களுக்கு வந்திருந்த தாதி ஒருவர் தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தினை (Visit Children's Home and Article by Australian nurse) வாசித்து காட்டினார். மற்றும் காமன்வெல்த் மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகள் செஞ்சோலைக்கு விஜயம் செய்ததையும் (பொதுநலவாய பிரதிநிதிகளின் செஞ்சோலை வருகை) நெஞ்சுருகி பேசியதையும் குறிப்பிட்டார்.
செஞ்சோலை இல்லத்திற்கு இன்னொரு தங்கும் விடுதி தேவை என்பதையும், ஆண் பிள்ளைகளுக்கான இல்லம் புதிதாக அமைக்கப்படுகிறது என்பதை குறிப்பிட்டு நல் உள்ளங்கள் இதற்கு உதவிபுரிய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்தப் புனித பணியில் தன்னுடன் இணைந்து பணியாற்றும் அனைவருக்கும் நன்றி கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

திரு.கணேசலிங்கம் அவர்கள் சிறுவர்களின் நன்னடத்தை பற்றி, கல்வியில் வளர்ச்சி பற்றி குறிப்பிட்டு பேசியதுடன் இல்லத்தில் சிறுவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அனைவருக்கும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். திரு.ராஜன், திரு.மகிழ்ச்சிகரன், திரு. இன்பநாயகம் ஆகியோர் சிறுவர்களின் வளர்ச்சியை பாராட்டி பேசியதுடன் சிறுவர்கள் ஊக்கத்துடன் செயற்பட வாழ்த்துகளை தெரிவித்தது, நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
தொடர்ந்து செஞ்சோலை இல்லத்தில் நடைபெற்ற போட்டிகளுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறுவர்கள் இல்ல தந்தையாகிய திரு.பத்மநாதன் அவர்களுக்கு தமது அன்புப் பரிசு ஒன்றையும் வழங்கினார்கள்.












Click it and Unblock the Notifications