இலங்கையில் திடீரென ஓங்கும் இந்தியாவின் 'கை'... அதிர்ச்சியில் சிங்கள தலைவர்கள்
இலங்கையில் இந்தியாவின் கை திடீரென ஓங்கியிருப்பதால் சிங்கள தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video

கொழும்பு: இலங்கையில் இந்தியாவின் கை திடீரென ஓங்கியிருப்பது சிங்கள தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குறிப்பாக மத்தல விமான நிலைய பராமரிப்பை இந்தியாவிடம் ஒப்படைப்பது என்பது ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைவிட மோசமானது என விமல் வீரவன்ச போன்றோர் சாடியுள்ளனர்.
அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையை தமது பிடிக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது இந்தியாவின் நெடுங்கால போராட்டம். இந்திய பிரதமராக இந்திரா காந்தி இருந்த வரை இலங்கை அடங்கித்தான் இருந்தது.
அப்போது வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் சக்தியாக பிரதமர் இந்திராதான் இருந்தார். ஆனால் ராஜீவ் காந்தி காலத்தில் வெளியுறவுக் கொள்கையை அதிகாரிகள் தீர்மானிக்கும் நிலை உருவானது.

இந்தியாவின் பிடி தளர்ந்தது
இலங்கை விவகாரத்தில் ரா, ஐபி உள்ளிட்டவற்றின் அதிகாரிகளே பிரதான பாத்திரங்களை வகித்தனர். இதனால் இந்திய வெளியுறவுக் கொள்கை பலத்த சரிவை சந்தித்தது. குறிப்பாக இலங்கையில் இந்தியாவின் பிடி தளர்ந்து சீனாவின் கை ஓங்கியது.

தெற்கே சீனா வடகிழக்கில் இந்தியா
மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் சீனாவுக்கு முற்று முழுதாக இலங்கையின் தென்பகுதி தாரைவார்க்கப்பட்டது. இதனால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இலங்கையின் தென்பகுதியில் சீனாவும் வடகிழக்கில் இந்தியாவும் என்கிற நிலைமை ஏற்பட்டது.

வடகிழக்கில் சீனா நிறுவனம்
சீனா நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தால் தமிழர்களின் தாயகப் பிரதேசத்தில் வெளிநாட்டவர் குடியேற்றம் அதிகரிக்கும் என கவலை தெரிவித்தது இந்தியா. ஆனால் இலங்கை அரசோ, நிறுவனம்தான் சீனா; அதில் 3,000 தமிழர்கள்தான் பணியாற்றுவர், அதேபோல் சீனா மேலும் 2 தொழிற்சாலைகளை அமைக்க உள்ளது. அதில் 2,000 தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என விளக்கம் அளித்தது.

வெளியுறவுத் துறை செயலர் பயணம்
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கேசவ் கோகலே அண்மையில் கொழும்பு பயணம் மேற்கொண்டிருந்தார். இலங்கையில் இந்தியா செயல்படுத்த இருக்கும் 16 திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டார்.

அதிர்ச்சியில் சிங்கள தலைவர்கள்
சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்ட அம்பந்தோட்டா துறைமுகத்துக்கு அருகே கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் மத்தல விமான நிலைய பராமரிப்பை இந்தியாவுக்கு வழங்குவது குறித்த இறுதி ஆலோசனை இதில் மிகவும் முக்கியமானதாகும். மத்தல விமான நிலையம் தொடர்பாக இந்திய அதிகாரிகளும் அண்மையில் இலங்கை சென்று ஆய்வு நடத்தி இருந்தனர். சீனாவையும் இந்தியாவையும் சமாதானப்படுத்தும் வகையில்தான் இலங்கை அரசு இப்படியான ஒரு முடிவுக்கு வந்துள்ளது என்பது அந்நாட்டு எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. ஆனால் சிங்கள இனவாதியான விமல் வீரவன்ச நேற்று வெளியிட்ட அறிக்கையிலோ, மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு தருவது என்பது ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைவிட மோசமானது. திருகோணமலை துறைமுகத்தில் இந்தியா நுழைவதற்கு இது வழிவகுக்கும் என அதிர்ச்சி தெரிவித்துள்ளளார். இலங்கையில் இந்தியாவின் கை திடீரென இப்படி ஓங்கியிருப்பது தெற்காசிய அரசியல் ஆடுகளத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications