இசைப்பிரியா, உஷாளினி படம்.. எதுவுமே தெரியாது: முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் இலங்கை!!
கொழும்பு: ராணுவ முகாமில் இசைப்பிரியா மற்றும் உஷாளினி என்று ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில் இருக்கும் பெண்கள் தொடர்பாக ராணுவத்துக்கு எதுவும் தெரியாது என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
தமிழீழ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா, ராணுவ பங்கர் ஒன்றில் உயிரோடு அமர்ந்திருக்கும் புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. அவருடன் மற்றொரு பெண்ணும் அமர்ந்திருந்தார்.
அந்தப் பெண் உஷாளினி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கூறியதாவது:
படங்களில் இருப்பவர்கள் யார்? எவர் என்பது தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியாது. அவர்களின் பெயர்கள் இசைப்பிரியா, உஷாளினி என்பதைக் கூட ஊடகங்கள் மூலமாகவே தெரிந்து கொண்டோம்.
இசைப்பிரியா மற்றும் அவருடன் உள்ள பெண் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் ராணுவத்தின் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ராணுவத்தின் விசாரணை நீதிமன்றத்தின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கை ராணுவத்துக்கு எதிராக சேனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள், உண்மையானவையா அல்லது பொய்யானவையா என்பது தொடர்பாக ராணுவ விசாரணை நீதிமன்றம் விசாரணை செய்து வருகின்றது.
இது தவிர, புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்பது தொடர்பாக ராணுவத்துக்கு தெரியாது.
இவ்வாறு பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கூறினார்.