இலங்கை அதிபர் தேர்தல்: இன்று நள்ளிரவுடன் பிரசாரம் ஓய்கிறது! 8-ந் தேதி வாக்குப் பதிவு!!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவுடன் ஓய்கிறது. வரும் 8-ந் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது
இலங்கையில் 7வது அதிபர் தேர்தல் வரும் 8-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது.
இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவும் அவரை எதிர்த்து 49 கட்சிகளின் பொதுவேட்பாளராக ராஜபக்சேவின் முன்னாள் அமைச்சர் மைத்ரிபால சிறிசேனவும் போட்டியிடுகின்றனர்.

மைத்ரிபால சிறைசேன, ராஜபக்சேவின் சுதந்திர கட்சியில் பொதுச்செயலராக இருந்தவர். தற்போது மைத்ரிபாலவை ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையோர் ஆதரிக்கின்றனர்.
ராஜபக்சே அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் பலரும் மைத்ரிபால அணிக்கு தாவிவிட்டனர். அதேபோல் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பலரையும் ராஜபக்சேவும் பேரம் பேசி தம்முடன் இணைத்துக் கொண்டிருக்கிறார்.
இருப்பினும் இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்திகளாக தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் மைத்ரிபாலவையே ஆதரிக்கின்றனர்.
இதனால் ராஜபக்சே தோல்வியைத் தழுவுவார் என்று கூறப்படுகிறது. இதனாலேயே தமிழர் பகுதிகளில் தமிழில் பேசி ராஜபக்சே வாக்கு சேகரித்தார். அத்துடன் தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசாகிய என்னையே தேர்வு செய்யுங்கள் என்றும் கெஞ்சினார்.
ஆனால் தமிழர் பிரதிநிதிகளாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ராஜபக்சேவை அகற்றியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இப்படி கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் ஓய்கிறது.
இறுதி நாளான இன்று கெஸ்பேவையில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் ராஜபக்சே பேசுகிறார். கொழும்பு மருதானையில் நடைபெறும் கூட்டத்தில் மைத்ரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க, சரத் பொன்சேகா, மனோ கணேசன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
இந்தத் தேர்தலில் ராஜபக்சே, மைத்ரிபாலவுடன் சேர்த்து மொத்தம் 19 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். இந்தத் தேர்தலை வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications