இன்று மாலை அதிபராக பதவியேற்கிறார் மைத்ரிபால சிறிசேன?
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன, இன்று மாலை பதவியேற்கவுள்ளதாக அவரது ஆதரவுக் கட்சி ஒன்றின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வியைச் சந்தித்துள்ளார். அதிபர் மாளிகையை விட்டும் அவர் வெளியேறி விட்டார். இத்தேர்தலில் ராஜபக்சே அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரான மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்று அதிபராகிறார்.
இதையடுத்து இன்று மாலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் புதிய அதிபராக சிறிசேன பதவியேற்கவுள்ளார். மாலை 6 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி ஒன்றின் செய்தித் தொடர்பாளரான சமன் அதாவுடஹெட்டி என்பவர் கூறியுள்ளார்.
இருப்பினும் அரசுத் தரப்பில் எந்தவிதமான அதிகாரப்பூர்வ செய்தியும் இதுவரை வெளியாகவில்லை.
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அதிபர் மாளிகையைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார் ராஜபக்சே. அதன் பின்னர் அவர் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கேவுடன் போனில் பேசினார். மைத்ரிபால சிறிசேனவுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி மைத்ரிபால சிறிசேன கிட்டத்தட்ட 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பில் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
இதற்கிடையே மைத்ரிபாலவின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொழும்பில் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். அதேசமயம், ராஜபக்சே ஆதரவாளர்கள் அமைதியாகி விட்டனர். வெற்றிக் கொண்டாட்டத்தின்போது மோதல் ஏதும் நடந்ததாக இதுவரை தகவல் இல்லை.