ஆயுதக் கடத்தல் புகார்- கோத்தபாயவின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய கோர்ட் உத்தரவு!!
கொழும்பு: ஆயுதக் கடத்தல் வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்சேவின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய காலி நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையின் காலி துறைமுகத்தில் அண்மையில் பெருமளவிலான ஆயுதங்களுடன் இருந்த கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டது. தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இக்கப்பலில் இருந்த ஆயுதங்களை கோத்தபாய ராஜபக்சேதான் விற்பனை செய்ததாக கூறப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையே சட்டவிரோதமாக அவர் விற்பனை செய்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் அண்மையில் கோத்தபாய ராஜபக்சேவிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கோத்தபாய வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கோத்தபாயவின் வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் காலி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications