சீனாவுடனான நட்புறக் கொள்கையை தொடர்வோம்: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உறுதி
கொழும்பு: சீனாவுடனான நட்புறவை இலங்கை தொடரும் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே சீனா ஆதரவாளராக இருந்தார். இதனால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராஜபக்சேவை ஆட்சியில் அகற்ற விரும்பின.
இதனால் தங்களுக்கு ஆதரவான மைத்ரிபால சிறிசேனவை அதிபர் தேர்தலில் நிறுத்தி வெல்ல வைத்தன. அதிபர் தேர்தலில் வென்ற மைத்ரிபால சிறிசேனவும் சீனா உதவியுடனான திட்டங்களை நிறுத்தி வைத்தார்.
மேலும் அமெரிக்கா, இந்தியாவுடன் நல்லுறவுக்கான கதவுகளை திறந்துவிட்டார். இதனாலேயே இலங்கையில் அமெரிக்காவுக்கு எதிரான தீர்மானங்கள் கைவிடப்பட்டு தற்போது இலங்கைக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கும் தீர்மானத்தை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது.
இருப்பினும் இந்த தீர்மானத்துக்கு சீனாவும் ஆதரவளித்தது. இதனை பயன்படுத்தி மீண்டும் இலங்கையை தமது வலையில் சிக்க வைக்க சீனா களத்தில் இறங்கியுள்ளது.
இதற்காக இலங்கைக்கான சிறப்பு தூதராக சீனாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் லிஜியூ சென்மின் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் உயர்நிலைக் குழு உடனடியாக இலங்கை வருகை தந்துள்ளது.
இக்குழுவினர் கொழும்பில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து பேசினர். அப்போது சீனா தரப்பில், தென்னாசியாவின் முக்கிய நாடாக இலங்கையை மதிக்கிறோம்; இலங்கையின் வளர்ச்சிக்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று லிஜியூ சென்மின் உறுதியளித்தார்.
மேலும் இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள சீனாவின் திட்டங்களை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட சிறிசேன, சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 2வது கட்ட கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அத்துடன் சீனாவுடனான நட்புறவை இலங்கை தொடரும்; ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த ஆதரவுக்கு நன்றி என்றும் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.