ரணிலுக்கு ஆதரவு.. தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிரடி முடிவு.. இலங்கை பிரதமராக ராஜபக்ஷே தொடருவது சிரமம்
Recommended Video
கொழும்பு: அதிபர் சிறிசேனாவால் பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்த உறுப்பினர் பலம் 225.
இதில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி 106 உறுப்பினர் பலத்தோடு உள்ளது. மைத்திரிபால சிறிசேன-மஹிந்த ராஜபக்ஷ அடங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 96 உறுப்பினர்கள் பலத்தை கொண்டுள்ளது.
மூன்றாவது பெரிய கூட்டணி
இதில் மூன்றாவது பெரிய கூட்டமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு தான். இந்த கூட்டணிக்கு 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலம் உள்ளது. எனவே எந்தக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமானாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படுகிறது.
கூட்டணி தொடர வேண்டும்
இந்த நிலையில் அந்தக் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட எம்பியுமான சுமந்திரன், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சிறிசேன-ரணில் விக்கிரமசிங்கே கூட்டணி தொடர வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளார்.
சூசகம்
இதன் மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நவம்பர் 16ம் தேதி கூடும்போது புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற கட்சிகள்
மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி) 6 உறுப்பினர்களும், டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பிக்கு 1 உறுப்பினரும், சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.