இலங்கை போர்க்குற்ற விசாரணையில் முன்னேற்றம் இல்லை- மைத்ரியிடம் சீறிய அமெரிக்காவின் சமந்தா பவர்
கொழும்பு: போர்க்குற்றம் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவிடம் ஐ.நா.வுக்கான அமெரிக்கா தூதர் சமந்தா பவர் காட்டமாக கூறியுள்ளார்.
ஐ.நா.வுக்கான அமெரிக்கா தூதர் சமந்தா பவர் இலங்கையில் பயணம் மேற்கொண்டார். யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதியிலும் அவர் பயணம் மேற்கொண்டு நிலைமைகளை கேட்டறிந்தார்.
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனையும் அவர் சந்தித்தார். அப்போது இலங்கையில் நிலையான அமைதியை உருவாக்க அமெரிக்கா பாடுபடும் என்றார் அவர்.
தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு
சமந்தா பவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்த நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
ரணிலின் இரவு விருந்து
பின்னர் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவையும் நேற்று சமந்தா சந்தித்தார். அமைதியை ஏற்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என்று ரணிலிடம் சமந்தா உறுதியளித்தார். அவருக்கு ரணில் இரவு விருந்து அளித்தார்.
மைத்ரியிடம் காட்டம்
இதனைத் தொடர்ந்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவையும் சமந்தா பவர் சந்தித்தார் இச்சந்திப்பின் போது போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இலங்கையின் விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாதது அதிருப்தி அளிக்கிறது என்று காட்டமாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கண்காணிக்கும் ஒபாமா
முன்னதாக நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய சமந்தா, இலங்கையின் நிகழ்வுகளை அமெரிக்கா அதிபர் ஒபாமா உன்னிப்பாக கவனித்து வருகிறார். ஒட்டுமொத்த உலகமும் இலங்கையை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. தமிழர் தாயகமான வடக்குப் பகுதியில் நிலம் இன்னமும் ராணுவம் வசமே உள்ளது. தமிழரிடத்தில் ஒப்படைக்கப்படாமல் இருக்கிறது. அவற்றை தமிழரிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.