ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகிறது.. ராஜபக்சேவின் "நாய் பேச்சுக்கு" விக்னேஸ்வரன் பதிலடி!
யாழ்ப்பாணம்: வைக்கோல் போரைக் காத்த நாய் போல வடக்கு மாகாண சபை இருக்கிறது இலங்கை அதிபர் ராஜபக்சே விமர்சித்ததற்கு அம்மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நெத்தியடி பதிலடி கொடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விக்னேஸ்வரன் பேசியதாவது:
மகிந்த ராஜபக்சே எங்கள் வடமாகாண மக்களையும் வடமாகாண சபையையும் நாய் என்று கூறியுள்ளார். எங்கள் வைக்கோல் போரின் ஒரு பகுதியை தீ வைத்து பொசுக்கியதால்தான் (யுத்தம் நடத்தியதால்) ஜெனீவாவில் விசாரணை நடக்கின்றது.
அதாவது ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுவது போலத்தான் இருக்கின்றது ராஜபக்சேவின் பேச்சு. வடமாகாண மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களைப் போன்ற பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பார். அப்படி செய்யவில்லையே..
நாங்கள் இந்த வைக்கோல் போரை நாயாக இருந்து பராமரிப்போம். இந்த வடமாகாணம் என்கிற் இந்த வைக்கோல் போரை சில ஆடு, மாடுகள் (சிங்களவர்) மேய்ந்துவிடக் கூடாது என்பதற்காக நாயாக இருந்து பாதுகாப்போம்.
என்னை முட்டாள் விக்னேஸ்வரன் என்று இந்தியாவில் வாரண்ட் பிறப்பித்து தேடிக் கொண்டிருக்கும் டக்ளஸ் கூறியிருக்கிறார். தமிழகத்தில் தனி ஒரு இடத்தில் (சிறையில்) இருக்க வேண்டியவர். இலங்கையின் ஆண்ட அரசாங்கங்களை ஏமாற்றி தப்பித்துக் கொண்டிருக்கிறார்.
டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டு செல்லப்பட்டால் நான் அவரைப் போல முட்டாள் என்றெல்லாம் அழைக்கமாட்டேன். முற்றிலும் பரிதாபம் காட்டவே முடியாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் என்று தான் குறிப்பிடுவேன்.
இவ்வாறு விக்னேஸ்வரன் பேசியுள்ளார்.