இலங்கையில் பயங்கரம்- சிங்கள பெண் பத்திரிக்கையாளர் வெட்டிக் கொலை
ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொலை நடந்துள்ளது. அந்தப் பெண் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
40 வயதான மெல் குணசேகரா, கொழும்பு புறநகர்ப் பகுதியில் வசித்து வந்தார். நேற்று காலை அவரது பெற்றோரும், சகோதரரும் சர்ச்சுக்குப் போயிருந்தனர். பின்னர் வழிபாடு முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பிய அவர்கள் வீட்டில் தனியாக இருந்த மெல் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணையைத் தொடங்கினர்.
மெல்லின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் உள்ளன. இந்தக் கொலை குறித்து விசாரிக்க 6 தனிப்படையினரை அமைத்துள்ளனர்.
சண்டே டைம்ஸ், லங்கா பிசினஸ் ஆன்லைன், ஏஎப்பியின் கொழும்பு பிரிவு உள்ளிட்டவற்றில் பணியாற்றியிருக்கிறார் மெல் குணசேகரா.
இலங்கையில் ஊடகத்தினர் மீதான தாக்குதல் அதிகரித்தபடியே உள்ளதும், இதுவரை பல பத்திரிக்கையாளர்கள் அங்கு கொல்லப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருவர் கைது
இந்தக் கொலை தொடர்பாக தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரிடமிருந்து, மெல் குணசேகராவின் செல்போனும் சிக்கியுள்ளது. இவர் பெயிண்டர் என்று கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று காலையில் மெல் குணசேகராவின் வீட்டுக்குள் போயுள்ளார். அப்போது அவரைப் பார்த்து மெல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் அந்த நபர் மெல் குணசேகராவைக் கொலை செய்து விட்டதாக போலீஸார் தரப்பில் சந்தேகப்படுகிறது.
மேலும் கொலை நடந்த இடத்திலிருந்து செல்போனையும், ரூ. 1200 பணத்தையும் திருடியதாகவும் அந்த நபர் கூறியதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.