ரகுபதி பற்றிய ஹைகோர்ட் கேள்விக்கு ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார்?: கருணாநிதி
சென்னை: இத்தனை கமிஷன்களுக்கும் நீதிபதி ரகுபதி மட்டும் தான் பொருத்தமானவரா என்று உயர் நீதிமன்றம் கேட்டுள்ளதற்கு ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கேள்வி பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேள்வி: கடந்த 5-7-2014 அன்று "ஒரே ரகுபதி தலைமையில் ஒன்பது விசாரணைகளா?" என்ற தலைப்பில் மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேர் இறந்தது பற்றி தாங்கள் தெரிவித்த கருத்துகளையே 4-8-2014 அன்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் அவர்களும் தெரிவித்திருக்கிறாரே?
கருணாநிதி: மவுலிவாக்கத்தில் அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது பற்றியும், அரசு நடவடிக்கைகள் பற்றியும் நான் விரிவாகத் தெரிவித்திருக்கிறேன். அந்தக் கடிதத்தின் இறுதியில், "2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன், கழக ஆட்சிக் காலத்தில் சிறப்பாகக் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டியதில் முறைகேடு இருப்பதாகக் கூறி, ஜெயலலிதா அதனை விசாரிக்க நீதிபதி தங்கராஜ் அவர்களை நியமித்தார். சில மாதங்களிலேயே அவர் அந்தப் பதவியிலிருந்து விலகியதால், நீதிபதி ரகுபதி அவர்களைத் தான் அந்தப் பொறுப்பிலே நியமித்து, அந்தப் பணிகளையும் இவர் ஆற்றி வருகிறார். மேலும் இதே நீதிபதி ரகுபதி தான், தற்போது குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் அமைப்பின் நீதிபதியாகவும் உள்ளார்.
அதுமாத்திரமல்ல; நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாகவும் இதே ரகுபதி தான் இருக்கிறார். இத்தனை பொறுப்புகளையும் வகித்து வரும் நிலையில் தான் தற்போது இந்த மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்தது பற்றியும் அவரையே விசாரணை நீதிபதியாக நியமித்திருப்பதில் இருந்தே, இந்த விசாரணை என்பது உள்நோக்கத்தோடு, கண்துடைப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறேன்.