குற்றாலத்தில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து ஒரு வயது குழந்தை உட்பட இருவர் பலி
குற்றாலத்தில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து ஒரு வயது குழந்தை உட்பட இருவர் பலியாகினர்.
குற்றாலம் : குற்றாலம் அருகே சுற்றுலா வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், ஒரு வயது கைக்குழந்தை உட்பட இருவர் பலியாகினர். போலீஸார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் தருவைப் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் தங்களது பகுதியில் நடந்த கோவில் திருவிழாவை முடித்துவிட்டு 25 பேருடன் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்தனர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த பால் மாரி என்பவர் ஓட்டி வந்தார்.
வேன் தென்காசி அருகே உள்ள திரவிய நகர் பகுதி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே வேனில் பயணித்த முத்து என்பவர் பலியானார்.
வேன் விபத்துக்குள்ளான தகவல் அறிந்து பாவூர் சத்திரம் போலீஸார் விரைந்து வந்து, காயம்பட்டவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ப்ரீத்தி பாலா என்கிற ஒரு வயது குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது.
மேலும், சுகன்யா என்கிற பெண் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்தில் குழந்தை இறந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.