தூங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - உயிர் ஊசல்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அதிகாலையில் ஒரு கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சிறுமி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாள்.
பொன்னேரி அருகே உள்ளது சோழவரம் அம்பேத்கர் நகர். இங்கு வசித்து வருகிறாள் அந்த சிறுமி. 10 வயதாகும் அச்சிறுமி 4வது வகுப்பு படித்து வருகிறாள்.
நேற்று இரவு தனது வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தாள். காற்று வரட்டுமே என்பதற்காக வீட்டுக்கதவைப் பூட்டாமல் திறந்து வைத்துத் தூங்கியுள்ளனர்.
இன்று காலை எழுந்து பார்த்த சிறுமியின் பெற்றோர் மகளைக் காணாமல் திடுக்கிட்டனர். அக்கம் பக்கத்தில் தேடத் தொடங்கினர். கிராம மக்களும் திரண்டு வந்தனர்.
இந்த நிலையில் வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள சுடுகாட்டில் ஒரு சிறுமி கிடப்பதாக தகவல் வந்தது. இ தையடுத்து ஓடிப் போய்ப் பார்த்தபோது அது காணாமல் போன சிறுமி என்று தெரிய வந்தது. உடலிலிருந்து நிறைய ரத்தம் வெளியேறிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள் சிறுமி.
இதையடுத்து அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுமியை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரக் கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளாள் என்று தெரிய வந்துள்ளது.
5 பேர் சேர்ந்து சிறுமியைக் கடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.