10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த மாணவன்... நாகர்கோவிலில் பரபரப்பு
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே 10ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து நாசப்படுத்திய இன்னொரு 10ம் வகுப்பு மாணவரையும், அவரது இரு சக நண்பர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
குலசேகரம் அருகே உள்ள மைலோடு பகுதியைச் சேர்ந்தவர் சுஜி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார். சுஜியின் பெற்றோர் கூலித்தொழிலாளர்கள்.

சம்பவத்தன்று அவர்கள் வேலைக்கு புறப்பட்டுச் சென்றனர். தனியாக இருந்த சுஜி அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சுஜியின் உறவினரான கீரிப்பாறை அருகே உள்ள வெள்ளாம்பி விளையைச் சேர்ந்த ராஜேஷ் மோட்டார்சைக்கிளில் வந்தார். அவர் மாணவியிடம் உனது பாட்டி வீட்டில் இறக்கி விடுகிறேன் என்னுடன் வா என்று அழைத்துச் சென்றார்.
உறவினர் என்பதால் மாணவியும் அவரது மோட்டார் சைக்கிளில் ஏறினார். ஆனால் ராஜேஷ் பாட்டி வீட்டுக்கு செல்லாமல் அதே பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு மாணவியை கடத்திச் சென்றார். இதை சற்றும் எதிர்பாராமல் அதிர்ச்சி அடைந்த மாணவி தன்னை பாட்டி வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கூறி சத்தம் போட்டுள்ளார். ஆனால் ராஜேஷ் மாணவியை அங்குள்ள ஒரு அறையில் சிறைவைத்து பலாத்காரம் செய்துள்ளார். மாணவி எவ்வளவோ போராடியும் ராஜேஷ் அவரை விடவில்லை.
அதன் பின்னர், ராஜேஷ் தனது நண்பர்கள் பிரகதீஷ், பாலாஜி (இவர்களும் 10ம் வகுப்பு படித்தவர்கள்தான்) ஆகியோரை அங்கு அழைத்தார். அவர்களிடம் மாணவியை அவரது வீட்டில் கொண்டு போய் விட்டு விடும்படி கூறி விட்டு தலைமறைவானார். பிரகதீசும், பாலாஜியும் மாணவியிடம் இதுபற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என கூறி மிரட்டினர். பின்னர் அவரது வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு அவர்களும் தப்பிச் சென்றனர்.
இந்த நிலையில் வேலைக்கு சென்ற மாணவியின் பெற்றோர் மாலையில் வீடு திரும்பினர். அவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி மாணவி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை நடத்தி மாணவியை பலாத்காரம் செய்ததாக ராஜேஷ் மீதும், அவருக்கு உதவியதாக பிரகதீஷ், பாலாஜி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். அவர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications