ஜெயலலிதாவுக்கு ஜெயில் கிடைச்ச பிறகு போலீஸ்காரங்க எனக்கு சல்யூட் அடிக்கிறாங்க.. விஜயகாந்த்!
மதுரை: மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மதுரையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் போராட்ட களம் கண்டார். அவரது தலைமையில் தேமுதிகவினர் மின் கட்டண உயர்வைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திக் கலைந்து சென்றனர்.
மேலும் மலேசியா போய் விட்டுத் திரும்பிய பிறகு விஜயகாந்த் கலந்து கொண்ட முதல் ஆர்ப்பாட்ப் போராட்டமும் இதுவேயாகும்.
ஆர்ப்பாட்டத்தின்போது விஜயகாந்த் பேசியதாவது....
ஜெயலலிதா மக்கள் முதல்வர் அல்ல. ஊழல் முதல்வர். ஜெயலலிதா மக்கள் முதல்வர் என்றால், ஓ.பி.எஸ். என்ன முதல்வர். என்னுடைய இந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை தமிழக அரசு.
37 எம்பிக்கள் காசு கொடுத்து ஜெயிச்சாங்க. மக்களுக்கு என்ன செஞ்சாங்க. மின் கட்டண உயர்வால் மக்களுக்கு வலிக்கிறது. அதனால் எனக்கும் வலிக்கிறது.
தண்டனை பெற்ற நீங்கள், வீட்டிக்குள்ளேயே இருந்து செல்போனில் பேசி அதிகாரிகளை இயங்க வைக்கிறீர்கள். பாவம் பன்னீர்செல்வம். நான் சினிமாவில் நடிப்பேன். மக்களிடம் நடிக்க மாட்டேன்.
ஹெலிகாப்டரில் அந்த அம்மா போனால், தரையில் படுத்து கும்பிடுகிறார்கள் அமைச்சர்கள். வெட்கமாக இல்லையா. அழுதுகிட்டே பதவியேற்றனர் நமது அமைச்சர்கள். அந்த அம்மா பதவி இழந்துவிட்டாங்க. நான் பதவியேற்க மாட்டேன் என்று எந்த அமைச்சராவது சொன்னார்களோ. சொல்ல வேண்டியதுதானே. பதவியை காப்பாத்த அழுதாங்க. மக்களை ஏமாற்றுகிறார்கள்.
தமிழ் ஈழத்திற்கு ஆதரவு என்று இப்போ பேசுகிறார்கள். பிரபாகரனை கைது செய்து கொண்டுவர வேண்டும் என்று சொன்னது யார்.
எனக்கு திமுக, அதிமுக இரண்டுமே ஒன்றுதான். அதிமுக ஆடசி மோசமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை. கொலை, கொள்ளை நடக்கிறது.
3 வருடமாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எனக்கு போலீசார் சல்யூட் அடிக்கல. ஆனால் இந்த அம்மா தண்டனைப் பெற்ற பிறகு சல்யூட் அடிக்கிறாங்க. இன்னைக்கு கூட சல்யூட் அடிச்சாங்க. ஆனால் போலீசார் நடிக்கக் கூடாது. நேர்மையாக வேலை செய்ய வேண்டும்.
இந்த ஊர்ல கிரனைட் முறைகேடு நடந்துள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்துகிறார். அவரை ஒழுங்கா விசாரணை நடத்த விடுறாங்களா.
நிரந்தர முதல்வர், நிரந்தர முதல்வர் என சொல்லிக்கிறாங்க. நிரந்தர முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே.
2023ல் தொலைநோக்கு திட்டம் என்று சட்டமன்றத்தில் அறிவித்தீர்கள். வருசத்துக்கு 15 ஆயிரம் வீடு என்று சொன்னீர்கள். இந்த திட்டங்கள் எல்லாம் நடக்குதா. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தான் மக்கள் கட்சியாக வெற்றி பெறும் என்றார் விஜயகாந்த்.