கச்சத்தீவு திருவிழா இன்று தொடக்கம்- 72 படகுகளில் 2,408 தமிழ்நாட்டு பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்!
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க தமிழ்நாட்டு பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.
ராமேஸ்வரம்: இந்தியா- இலங்கை எல்லையில் உள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் தேவாலயம் நடைபெறும் 2 நாட்கள் திருவிழாவில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து 72 படகுகளில் 2,408 மீனவர்கள் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர்.
கச்சத்தீவு, தமிழ்நாட்டுக்கு சொந்தமானது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், தமிழ்நாட்டு மீனவரால் கட்டப்பட்டது. 1970களில் கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு தன்னிச்சையாக தாரை வார்த்தது.

ஆனாலும் கச்சத்தீவு கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. இருந்த போதும் இலங்கை கடற்படை இந்த மீன்பிடி உரிமையை பறித்துக் கொண்டனர். மேலும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழ்நாட்டு மீனவர்களை காக்கை குருவிகளைப் போல ஈவிரக்கம் இல்லாமல் சுட்டுப் படுகொலை செய்து வருகிறது. இதுவரை 800 தமிழ்நாட்டு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. 2010-ம் ஆண்டு முதல் கச்சத்தீவில் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை தமிழ் மீனவர்கள் இணைந்து புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் பங்கேற்க 2,408 தமிழ்நாட்டு பக்தர்கள் கச்சத்தீவு புறப்பட்டுச் சென்றனர். மொத்தம் 72 படகுகளில் தமிழ்நாட்டு பக்தர்கள் கச்சத்தீவு சென்றுள்ளனர்.
கச்சத்தீவில் இருநாட்டு பக்தர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படை செய்திருக்கிறது. அத்துடன் கச்சத்தீவு பகுதியில் ரோந்து கப்பல்களையும் இலங்கை நிறுத்தி வைத்துள்ளது. கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு அப்பகுதிகளில் 5-ந் தேதி வரை மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications