ஓ.பி.எஸ்ஸுக்கு மேலும் 2 அதிமுக எம்.பிக்கள் ஆதரவு.. இதுவரை 4 பேர்!
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மேலும் 2 எம்.பிக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 4 எம்.பிக்களின் ஆதரவை அவர் பெற்றுள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மேலும் 2 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இவர்களையும் சேர்த்து மொத்தம் 4 எம்.பிக்களின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்துக்கு உள்ளது.
அதிமுக இரண்டாக பிளந்து விட்டது. ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணி தொடர்ந்து பலமடைந்து வருகிறது. படிப்படியாக பல்வேறு தலைவர்கள், நிர்வாகிகள், முக்கியத் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தற்போது ஓ.பி.எஸ் பக்கம் உள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்.பி வா மைத்ரேயன் மற்றும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா ஆகியோர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர். இந்தகச் சூழ்நிலையில் தற்போது மேலும் 2 எம்.பிக்களின் ஆதரவு பன்னீர் செல்வத்துக்குக் கிடைத்துள்ளது. கிருஷ்ணகிரி அசோக் குமார், நாமக்கல் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் ஓ.பி.எஸ் அணியில் இணைந்துள்ளனர்.
இதன் மூலம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நாடாளுமன்றத்தில் 4 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இது மேலும் பெருகிக் கொண்டே போனால் ஒரு கட்டத்தில் நாடாளுமன்றத்தில் அதிமுக உடையவும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.