2025ன் தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டம் இன்று..என்ன செய்ய போகிறார் ஆளுநர்? அதிமுகவின் பலே ப்ளான்!
சென்னை: 2025ஆம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று 9:30 மணிக்கு ஆளுநர் உரையுடன் துவங்க இருக்கிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற இருக்கும் நிலையில் அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பின் எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடக்கும் என்பது குறித்து சபாநாயகர் அறிவிக்க உள்ளார். இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து நான்காவது ஆண்டாக இன்று தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியின் உரையுடன் 2025 ஆம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது.

தொடர்ந்து ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பேசுகின்றனர். அதற்குப் பிறகு நடக்கும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் 2025 எத்தனை நாட்கள் நடக்கும் என்பது குறித்து சபாநாயகர் அறிவிக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்:
இந்த நிலையில் இன்று காலை 9:30 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குகிறது. ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் கொள்கைகள் சாதனைகள் குறித்து தயார் செய்யப்பட்ட உரை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை ஆளுநர் வாசித்து பேரவையின் முதல் கூட்டத்தை தொடங்கி வைக்கிறார். திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுகவுக்கும் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் ரவி தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே வெளியேறினார். அப்போது திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை ஆளுநர் உச்சரிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆளுநர் ஆர்.என்.ரவி:
2024ஆம் ஆண்டு முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் பேசும் போது தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் இசைக்க வேண்டும் என கூறி தனது உரையை முற்றிலும் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு சட்டசபை கூட்டத்திற்காக சபாநாயகர் அப்பாவு நேற்று காலை ஆளுநரை நேரில் சந்தித்து சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் இன்று கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் ஆளுநர் என்ன மாதிரியான முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள்:
இந்த நிலையில் இந்த சட்டசபை கூட்டத்தொடரில் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதை அடுத்து தனி அலுவலர்களை நியமனம் செய்வதற்கான சட்ட மசோதா இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக திட்டம்:
மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம், பெஞ்சல் புயல் பாதிப்பு சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த நோட்டீஸ் அதிமுக சார்பில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆளுநர் உரை, அதிமுக அரசியல் என சட்டசபை கூட்டம் களை கட்டும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications