போஸ்ட்பாக்ஸில் போடப்பட்ட பாஸ்போர்ட்டுகள்.. சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னையில் ஒரு தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைப் போட்டது யார் என்று தெரியவில்லை. மொத்தம் 25 புதிய பாஸ்போர்ட்டுகள் சிக்கியுள்ளன.
சென்னை புறநகரான நங்கநல்லூர் மார்க்கெட் பகுதியில் உள்ள தபால் பெட்டியில் இருந்து கடிதங்களை வழக்கம் போல தபால் ஊழியர் எடுத்துள்ளார். அப்போது அதில் கட்டுக்கட்டாக 25 புதிய பாஸ்போர்ட்டுகள் இருந்ததை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் போனது.
உயர் அதிகாரிகள் விரைந்து வந்து அதை ஆய்வு செய்தனர். அந்த பாஸ்போர்ட்டுகள், சென்னை, மதுரை உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ளவர்களுக்கானது. இது ஏன் இங்கே போடப்பட்டது என்று தெரியவில்லை. இதைப் போட்டது யார் என்றும் தெரியவில்லை. இதுகுறித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த தபால் அதிகாரிகள் பாஸ்போர்ட்டுகளையும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.