விடாமல் பெய்யும் மழை... அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்
சென்னை: வட கடலோரத் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘தென் மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் உருவான தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, இன்னும் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. அடுத்து வரும் 48 மணி நேரத்தில், அது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் (புயல் சின்னம்) என எதிர்பார்க்கிறோம். ஆனால் தற்போது இன்னும் அதே நிலையில்தான் நீடிக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 20 மி.மீ, புதுச்சேரி மாநிலம் காரைக்கால், நாகை, பாம்பன் ஆகிய இடங்களில் தலா 10 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இடியுடன் கூடிய மழை:
வட கடலோரத் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே கன மழை பெய்யும். மேலும் கடலோரத் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பலத்த தரைக்காற்று வீசும்:
சென்னை மாநகரில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாநகரின் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தரைக் காற்று பலமான வீசக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:
வட தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், வடக்கு, வடகிழக்கு திசையிலிருந்தும், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் வட மேற்கு, வடக்கு திசையிலிருந்தும், மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மீன் பிடிக்க செல்ல வேண்டாம்:
மேலும் ஆழ்கடல் பகுதிகளுக்குள் சென்று மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications