கூடங்குளம் 2வது அணுஉலையில் விரைவில் மின்உற்பத்தி தொடங்கப்படும் - வளாக இயக்குநர் சுந்தர்
நெல்லை: கூடங்குளம் 2-ஆவது உலையில் அணு எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்துள்ளது. இதையடுத்து மின்உற்பத்தியைத் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்திய-ரஷிய கூட்டு முயற்சியில் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதில், முதலாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியானது பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் தொடர்ந்து வருகிறது. முதல் உலையில் இதுவரை 950.91 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கூடங்குளம் 2-ஆவது உலையில் அணு எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்துள்ளது. இதையடுத்து மின்உற்பத்தியைத் தொடங்குவதற்கான கிரிட்டிகாலிட்டியை நிகழ்த்த வேண்டும். அதற்கு முன்பாக உலையின் வால்வுகளை பரிசோதனை செய்வதும், நீராவியை வெளியேற்றி அது செல்லும் பாதைகளைப் பரிசோதிப்பதும் அவசியமானது.
இரண்டாவது அணு உலையில் இப்போது அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக 2-ஆவது உலையில் இருந்து நீராவி வெளியேற்றப்படவுள்ளது. நீராவி வெளியேறும்போது சப்தம் எழுவது வாடிக்கை. இந்த சப்தமானது நீராவியின் அழுத்தத்துக்கேற்ப மெல்ல மெல்ல அதிகரிக்கக்கூடும்.
பகல் நேரத்தில் மட்டுமே இந்தச் சோதனை நடைபெறும். எனவே, சப்தம் கேட்டு பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம். சனிக்கிழமை காலை முதல் நீராவியை வெளியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்காக 2-ஆவது உலையில் நடைபெறும் இத்தகைய சோதனைகளுக்கு கூடங்குளம் மற்றும் சுற்றுப் பகுதி மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அந்த அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆர்.எஸ். சுந்தர் மேலும் கூறுகையில், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் தெரிவித்து, அணுப் பிளவுக்கான அனுமதியைப் பெறுவோம். அனுமதியைப் பெற்ற இந்த மாத இறுதியிலோ, அடுத்த மாத தொடக்கத்திலோ கிரிட்டிகாலிட்டி நடைபெறும். இதையடுத்து மின்உற்பத்தியைத் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.