புதிதாக கிளம்புகிறது தலைவலி.. ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை
ஆண்டிப்பட்டி தொகுதியின், தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் தொகுதியின் கதிர்காமு மற்றும் பெரம்பூர் தொகுதி வெற்றிவேல் ஆகிய அதிமுக எம்எல்ஏக்கள் தினகரனுடன் இன்று சந்திப்பு நடத்தி ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி என்று பிரிந்திருந்த அதிமுக தற்போது கூடுதலாக டிடிவி தினகரன் அணி என்ற ஒற்றாகவும் விரிவடைந்து உடைந்துள்ளது.
தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த எம்.எல்.ஏக்கள் பலரும் கடந்த இரு நாட்களாக திடீரென அவருக்கு எதிராக பேட்டியளித்து வருகிறார்கள்.
திடீர் ஆலோசனை
பன்னீர்செல்வம் அணியை இணைத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசில் பயணிக்க அவர்கள் விரும்புகிறார்கள். எனவே அதிமுக ஒரே அணியாக செயல்பட உள்ளதாக ஒரு சூழல் எழுந்த நிலையில், டிடிவி தினகரனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் ஆலோசனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று எம்எல்ஏக்கள்
ஆண்டிப்பட்டி தொகுதியின், தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் தொகுதியின் கதிர்காமு மற்றும் பெரம்பூர் தொகுதி வெற்றிவேல் ஆகிய அதிமுக எம்எல்ஏக்கள் தினகரனுடன் இன்று சந்திப்பு நடத்தி ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தளவாய் சுந்தரம்
இந்த ஆலோசனையில், அதிமுகவின், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரமும் பங்கேற்றார். அதிமுகவிலிருந்து வெளியேற தயார் என டிடிவி தினகரன் நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்று ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுக்கு எதிராக கலக்குரல்?
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலகக் குரல் எழுப்புவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சின்னத்திற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி சென்று விசாரணை அதிகாரிகளிடம் ஆஜராகும் முன்பாக குண்டு வீச தினகரன் திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.