தென்காசி ஒப்பந்ததாரர் கொலை வழக்கில் 3 பேர் கைது
செங்கோட்டை: தென்காசி அருகே ஒப்பந்ததாரர் கொலை வழக்கில் 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்
கேரள மாநிலம் தென்மலை அருகே உள்ளது எடமன். இங்கு செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதைக்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக தென்காசியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் தொழிலாளர்களை அழைத்து வரும் ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கும் நெல்லையை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கும் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து செல்வதில் முன் விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2ஆம் தேதி இசக்கிமுத்துவை காணவில்லை. மறுநாள் எடமன் தொலைபேசி அலுவலகம் அருகில் ரத்த காயத்தோடு இசக்கிமுத்து பிணமாக கிடந்துள்ளார்.
இது குறித்து தென்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் நெல்லையைச் சேர்ந்த மாரியப்பன், வடகரையை சேர்ந்த கணேசன், கல்லிடைக்குறிச்சி ஈத்தான் ஆகிய 3 பேரும் சேர்ந்து இசக்கிமுத்துவை பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து புனலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.