மதுரையில் பரிதாபம்... மகனுக்கு ஷேர் பிசினஸில் நஷ்டம்.. குடும்பத்தோடு தற்கொலை செய்த நெசவாளி
மதுரை: மதுரையில், ஒரு பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. ஷேர் மார்க்கெட் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் அதில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தார். மகன் அதிர்ச்சியிலும், மன வேதனையிலும், கடன்காரர்கள் நெருக்கியதாலும், மனம் உடைந்து காணப்பட்டதைப் பார்த்து அவரது தந்தை தனது மனைவி, மகனோடு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை சிலைமான் செளராஷ்டிர காலனியைச் சேர்ந்தவர் குபேந்திரன். 28 வயதான இவர் எம்.பி.ஏ. படித்தவர். இவருக்கு மனைவி, மகன் உள்ளனர்.
ஷேர் பிசினஸில் ஈடுபட்டிருந்தார் குபேந்திரன். ஆனால் அதில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளார். இதை சமாளிக்க கடன் வாங்க ஆரம்பித்தார். கடன் வாங்கினால்தான் அடைப்பது பெரும் கஷ்டமாச்சே... தொடர்ந்து கடன் வாங்க ஆரம்பித்து அது மலை போல உயர்ந்து விட்டது.
இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் குபேந்திரனை மிரட்டவும், நெருக்கவும் ஆரம்பித்துள்ளனர். சமாளிக்க முடியாமல் திணறியுள்ளார் குபேந்திரன். இதையடுத்து வேறு வழியில்லாமல் போலீஸில் புகார் கொடுத்தார் குபேந்திரன். போலீஸார் குபேந்திரனையும், கடன் கொடுத்தவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக நிலையை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
அப்படியும் குபேந்திரனைச் சுற்றிய தொல்லை தீரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை குபேந்திரன் குடியிருந்த வீடு விடிந்து பல மணி நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.
அப்போது குபேந்திரனின் தந்தை கிருஷ்ணாராம், தாயார் பிருந்தா ஆகியோர் தறி நெய்யப் பயன்படும் பாவுநூல் கயிறில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதேபோல குபேந்திரனும் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார்.
போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். தங்களது தற்கொலைக்குக் காரணம் இவர்கள்தான் என்று கூறி 6 பேரின் பெயர்களை மூன்று பேரும் மரணத்திற்கு முன்பு எழுதி வைத்திருந்தனர்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட 6 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.