ஒரே பைக்கில் 5 பேர் பயணம்! பின்னால் வந்த எமன்! குழந்தை உள்பட 3 பேர் பலி! வந்தவாசியில் பெரும் சோகம்
வந்தவாசி: வந்தவாசி அருகே சாலை விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரு சக்கர வாகனத்தில் 5 பேர் பயணம் செய்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பழைய மும்முனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று ஆடி மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு வெடாலில் உள்ள அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ராஜசேகர், அவரது மனைவி பத்மா, மகள்கள் சுபாஷினி, மோகனா ஸ்ரீ மற்றும் மைத்துனி பானு என 5 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது கீழ்சாத்தமங்கலம் பைபாஸ் கூட்டுச் சாலை அருகே ஒரு வளைவில் திரும்பிய போது நிலைத்தடுமாறிய இரு சக்கர வாகனம் அங்கிருந்த சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது. அதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
பின்னர் அருகில் இருந்தோர் வந்து பார்த்த போது ராஜசேகரின் மைத்துனி பானுவும், மகள் மோகனா ஸ்ரீயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த ராஜசேகர், அவருடைய மனைவி பத்மா, மகள் சுபாஷினி ஆகிய மூன்று பேரையும் மீட்ட அப்பகுதியினர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுப்பி வைத்தனர்.
மூவரும் மேல்சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு ராஜசேகரும் உயிரிழந்தார். மேலும் பத்மாவுக்கு சுபாஷினிக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த பொன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications