குடம்.. பணம்.. டோக்கன்.. பரபரக்கும் ஆர்.கே. நகர் தேர்தல்.. மேலும் 3 கம்பனி துணை ராணுவம் குவிப்பு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேலும் 3 கம்பனி துணை ராணுவம் ஆர்.கே. நகர் தொகுதிக்கு வந்தது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. அமைதியான முறையில் அங்கு தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 62 பேர் போட்டியிடுகிறார்கள். இதனால் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மேலும், தொகுதி முழுவதும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக திமுக தலைவர்கள் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தனர். மேலும், ஓபிஎஸ் அணியான அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியைச் சேர்ந்தவர்களும் இதே புகாரை தேர்தல் ஆணையத்திடம் அளித்தனர்.
இதனையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் முன்கூட்டியே துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். 150 பேர் கொண்ட 3 கம்பனி துணை ராணுவ வீரர்கள் நேற்று இரவு தொகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
ஏழுகிணறு, எம்.கே.பி.நகர் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள துணை ராணுவ படையினர் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளை தடுப்பதற்காக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, தற்போது மேலும் 3 கம்பனி துணை ராணுவத்தினர் ஆர்.கே. நகர் தொகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர். இத்தோடு சேர்த்து 300க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் சென்னை வந்துள்ளனர். வாக்குப்பதிவிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தொகுதி முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.