காய்கறிகளுக்கு அடியில் மறைத்து கடத்தப்பட்ட 30 இலட்சம் மதிப்புள்ள பான் மசாலா... 2 பேர் கைது
செங்கோட்டை அருகே சரக்கு வாகனம் மூலம் கடத்தப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா போதைப் பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
செங்கோட்டை: செங்கோட்டை அருகே சரக்கு வாகனம் மூலம் கடத்தப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த இருவரையும் கைது செய்தனர்.
தமிழக கேரளா எல்லை பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை வழியாக 4 வாகன சோதனை சாவடிகளை கடந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் பல்வேறு அத்தியாவசிய பொருள்களையும்,சரக்குக்களையம் ஏற்றி சென்றுவருகிறது.
இந்நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் தமிழகத்தில் இருந்து காய்கறிகள் ஏற்றிக் கொண்டு கேரளாவிற்கு சென்ற சரக்கு வாகனத்தில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது காய்கறிகளின் அடியில் 30 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள கேரளாவில் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் புகையிலை பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பான் மசாலாவோடு அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீசார், அதில் பயணம் செய்த செங்கோட்டையை சார்ந்த கணேசன், மகேந்திரன் என்ற இருவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.