3000 போலீஸாரின் தபால் ஓட்டுக்கள் எங்கே.. ஓட்டுப் போட முடியாமல் தவிப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கடலூரைச் சேர்ந்த 3000 போலீஸாருக்கு தபால் ஓட்டுக்களே வழங்கப்படவில்லையாம். இதனால் தபால் ஓட்டுக்களைப் போட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனராம்.
தங்களுக்கு தபால் ஓட்டுக்கள் வழங்கப்படுமா என்ற காத்திருப்பில் இவர்கள் உள்ளதாக கூறுகிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் திமுக ஆட்சிக்காலத்தில் துறைக்கு வந்தவர்கள் அல்லது பதவி உயர்வு பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது. எனவே இவர்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்ற அச்சத்தில் தபால் ஓட்டுக்களை இவர்கள் கண்ணிலேயே காட்டாமல் விட்டு விட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது வாக்குப் பதிவு முடிந்து போய் விட்டதால் தங்களுக்கு வாய்ப்பளிக்க வாய்ப்பு கிடைக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று இவர்கள் ஏக்கத்துடன் கூறுகின்றனர்.
தேர்தல் பணியில் ஈபடுபட்டிருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினருக்காக தபால் ஓட்டுக்கள் அளிக்கப்படுகிறது. இவர்கள் தங்களது ஓட்டுக்களை இருக்கும் இடத்தில் சேர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.