மக்கள் ஜனாதிபதி கலாம் பிறந்தநாள் - பழனி மாணவர்கள் உருவாக்கிய 350 அடி ஓவிய அஞ்சலி!
பழனி: மக்களின் குடியரசுத்தலைவர் எனப் போற்றப்படும் மறைந்த அப்துல் கலாமின் 84 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பழனி சுவாமி மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 650 பேர் சேர்ந்து 350 அடி நீளத்திற்கு 350 வகையான அவரது உருவப்படங்களை வரைந்து சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி வளாகத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியங்களில் அப்துல் கலாமின் பொன்மொழிகளும் இடம் பெற்றுள்ளன.
சுந்தரபாண்டியன் என்ற மாணவர் ரூபாய் நோட்டுகளால் அப்துல்கலாம் படத்தை உருவாக்கியுள்ளார். மற்றொரு மாணவர் பஸ் பயண சீட்டுகளால் அவரது உருவத்தை வரைந்திருந்தார். இப்படி பல்வேறு வகையான அப்துல் கலாம் ஓவியங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து ஓவிய ஆசிரியர் அன்புச்செல்வன் கூறுகையில், "அப்துல் கலாம் மறைந்த பின் வரும் முதல் பிறந்த நாள் என்பதால் இந்த படங்களை ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கண்காட்சியாக வைக்க முயற்சி எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.