ஜெயலலிதா வராததால் கடைசி நேரத்தில் இல்ல திருமணத்தை ரத்து செய்த 4 அமைச்சர்கள்
சென்னை: ஜெயலலிதா திடீரென கலந்து கொண்டு முடியவில்லை என்று கூறியதால், மாநிலத்தின், நான்கு அமைச்சர்கள் தங்கள் வீட்டு திருமணத்தை ரத்து செய்துள்ளனர்.
அமைச்சர்கள் வைத்திலிங்கம், காமராஜ், முக்கூர் சுப்பிரமணியன் மற்றும் சண்முகநாதன் ஆகிய நால்வரும், தங்களின் பிள்ளைகள் திருமணத்தை நடத்தி வைக்க ஜெயலலிதாவிடம் நீண்ட நாட்களாகவே தேதி கேட்டு வந்தனர்.
இவர்களுக்கு டிசம்பர் 6ம் தேதியை முகூர்த்த நாளாக நிர்ணயித்தார் ஜெயலலிதா. எனவே தடபுடலாக வேலை நடந்து வந்தது. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எம்.எல்.ஏ.க்கள் குணசீலன், சம்பத்குமார், வைரமுத்து, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜன் போன்றோரின் இல்ல திருமணத்திற்கும், அதே தேதித்தைதான் கொடுத்திருந்தார் ஜெயலலிதா.

தடபுடல்
கூட்டாக திருமணத்தை நடத்தினாலும், தங்கள் ஏரியாக்களில் திருமண வரவேற்பு விருந்து வைபவங்களை ஏக தடபுடலாக ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்தார்கள் அமைச்சர்களும், அவர்களின் சகாக்களும்.

பிரமாண்டம்
அமைச்சர் வைத்திலிங்கம், தன் மகள் பிரதிபாவின் வரவேற்பு நிகழ்வை, தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மாநகராட்சி மைதானத்தில் நடத்தவிருந்தார். இதற்காக 20 ஏக்கரில் பிரமாண்டமாகப் பந்தல் அமைக்கும் பணி நடந்து வந்தது.

சமையல்
அங்கு நடத்தப்பட்டிருந்த பொருட்காட்சி அவசரமாக அகற்றப்பட்டது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்தில் சமையல் செய்த கலைஞர்களே இங்கும் சமையலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.

திருமணம் நிறுத்தம்
ஆனால், திருமணத்தில் பங்கேற்க முடியாது என ஜெயலலிதா கூறிவிட்டதால், தற்போது திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. பந்தல்கள் பிரிக்கப்பட்டுள்ளனவாம். இதனால், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளின் குடும்பத்தார் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மக்கள் கோபம்
வெள்ளம் பாதித்த பகுதிகளை 45 நிமிட காலம் ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்டார் ஜெயலலிதா. இன்னும் வெள்ளம் வடியாத நிலையில், திருமணத்திற்கு மட்டும் நேரில் சென்று வாழ்த்தினால், மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டிவரும் என்று நினைத்து, திருமணத்தை ஒத்திவைக்க ஜெயலலிதா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications