பஸ் பயணியிடம் ரூ. 8 லட்சத்தைப் பறித்து பங்கு போட்ட 4 போலீசார்!
தருமபுரி: தருமபுரி பேருந்து பயணியிடம் பணம் பறித்த போலீஸார் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் செம்மரக் கட்டைகள் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, தலைமைக் காவலர்கள் 4 பேர் கொண்ட தனிப் படையை அமைத்தனர்.
அவர்களைக்கொண்டு, மாவட்டத்தில் செம்மரக்கடத்தல் குறித்த நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெ.லோகநாதன் ஏற்பாடுகளை செய்துள்ளார்.
தனியார் பேருந்தில் சோதனை:
இந்த தனிப் படை போலீஸார் கடந்த சில நாள்களுக்கு முன்பு பென்னாகரத்திலிருந்து ஒகேனக்கல்லுக்கு சென்ற தனியார் பேருந்தில் சோதனையிட்டனர்.
செம்மரக்கடத்தல் குழு:
அந்தப் பேருந்தில் பயணம் செய்த செம்மரக்கடத்தல் குழுவுக்கு மரம் வெட்ட ஆட்களை அனுப்பிவைக்கும் வடிவேல் ரூபாய் 8 லட்சத்தை கொண்டு சென்றுள்ளார்.
8 லட்ச ரூபாய் பறிமுதல்:
தனிப்படை போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி, ரூபாய் 8 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பணத்தை பறித்துக்கொண்ட பின்னர் இந்த நால்வரும் செம்மரக்கடத்தல் கும்பலுக்கு உதவியும் செய்தனர்.
5 லட்சம் பங்கீடு:
வழக்கு விசாரணையில், பேருந்தில் வந்த வடிவேலுவிடமிருந்து ரூபாய் 3 லட்சத்தை மட்டுமே பறிமுதல் செய்ததாக கணக்கு காட்டிய தனிப் படை போலீஸார், மீதமுள்ள ரூபாய் 5 லட்சத்தை தாங்களே பங்கிட்டுக் கொண்டனராம்.
விசாரணையில் அம்பலம்:
இதுகுறித்து மாவட்ட எஸ்.பிக்கு உளவுப் பிரிவு போலீஸார் மூலம் தகவல் தெரிய வந்தது. அதன்பேரில், நடைபெற்ற விசாரணையில் தனிப்படை போலீஸார் நால்வரும் பணத்தை பங்குபோட்டுக் கொண்டது தெரிய வந்தது.
பணியிடைநீக்கம்:
மேலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, தலைமைக் காவலர்களான சேகர், மற்றொரு சேகர், சாரதி, காவலர் ஜீவா ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. ஜெ.லோகநாதன் உத்தரவிட்டார்.
விசாரணை தீவிரம்:
மேலும், இந்த முறைகேட்டில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications