கடனை வசூலிக்க பூட்டை உடைத்து வீட்டை சூறையாடிய கந்துவட்டிக் கும்பல்
திருப்பூர்: வீட்டின் மீது கொடுத்த கடனை வசூலிக்கும் விதமாக பூட்டிய வீட்டை உடைத்து உள்ளிருந்த பொருட்களை தெருவில் வீசியதாக கந்துவட்டிக் கும்பலைச் சேர்ந்த 5 பேரை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர், விஜயாபுரம் பழனியம்மாள் நகர் முதல்வீதியைச் சேர்ந்த மோகன் (வயது-48), பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா. (வயது-38) இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த ஞாயிறன்று மோகனின் முதல் மகள் ஐஸ்வர்யாவுக்கு கேரளாவில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக மோகன் குடும்பத்தார் கேரளா சென்றிருந்தனர்.
இதனை அறிந்து கொண்ட கந்துவட்டிக் கும்பல் ஒன்று, கடந்த சனிக்கிழமையன்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளிருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருள்களை வெளியில் தூக்கியெறிந்து விடு வீட்டை ஆக்கிரமித்தனர்.
அக்கம்பக்கத்தார் கொடுத்த தகவலின் பேரில், இது தொடர்பாக மோகன் தொலைபேசி வாயிலாக திருப்பூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
விரைந்து செயல்பட்ட போலீசார் இது தொடர்பாக, திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ செந்தில்குமார் (வயது-20), பொன்னாபுரம் செந்தில் குமார் (வயது-25), கரூர், அரவக்குறிச்சி கோபால் (வயது-36), விஜயாபுரம் சுதாகர் (வயது-28) ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோகனின் மனைவி அம்பிகா, இராக்கியாபாளையம் பிரிவைச் சேர்ந்த கந்துவட்டிக்காரர் தண்டபாணி என்பவரிடம் ரூ. 3.5 லட்சம் கடன் வாங்கியிருந்தாகவும், வாங்கிய கடனுக்காக அம்பிகா தனது வீட்டை தண்டபாணிக்கு பொது அதிகாரப் பத்திரம் செய்து கொடுத்திருந்ததாகவும், . வாங்கிய கடனுக்கு வட்டியும், அசலும் கொடுக்காததால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணையில் உள்ளது என்பதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று தலைமறைவான தண்டபாணியை கைது செய்த போலீஸார், வீட்டையும் மீட்டு மோகனிடம் ஒப்படைந்த்தனர்.












Click it and Unblock the Notifications