மதுரையில் ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து 50 சவரன் நகையை ஆட்டைய போட்ட கொள்ளையர்கள் - வீடியோ!
மதுரையில் ஆசிரியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை : மதுரையில் விடுமுறைக்கு வெளியூர் சென்றிருந்த ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை காளவாசல் ஆரோக்கிய மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ஆல்பர்ட், ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தொடர் விடுமுறையையொட்டி இவர் தனது குடும்பத்தினருடன் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த சமயத்தில் அவரது வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 50 சவரன் நகை மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
விடுமுறை முடிந்து வீடு திரும்பிய ஆல்பர்ட் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆல்பர்ட் போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து தடவியல் நிபுணர்கள் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.