மதுஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற டாஸ்மாக் ஊழியர் சங்க பொது செயலாளர் உட்பட 6 பேர் மீது தேசதுரோக வழக்கு!
திருச்சி: மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மதுஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய டாஸ்மாக் ஊழியர் சங்க பொதுச் செயலர் தனசேகரன் உட்பட 6 பேர் மீது திருச்சி போலீசார் தேசதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு தீவிர பிரசாரம் நடைபெற்றது. அப்போது மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன், மூடு டாஸ்மாக்கை என்ற பாடலைப் பாடியிருந்தார். அதில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கும் வரிகள் இடம்பெற்றதாக கூறப்பட்டது.
பின்னர் கோவனை தேசதுரோக வழக்கின் கீழ் சிறையில் அடைத்தது போலீஸ். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரைக்குப் போய் கோவன் ஜாமீனில் விடுதலையானார்.
இந்நிலையில் கடந்த மாதம் திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக மதுஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாடு நடைபெற்று முடிந்த ஒரு மாதத்துக்குப் பின்னர் தற்போது அம்மாநாட்டில் பங்கேற்று பேசிய 6 பேர் மீது தேசதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது.
மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைவர் காளியப்பன், அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீ, மனித உரிமை பாதுகாப்பு மைய குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், வாள்வீச்சு வீரர் டேவிட்ராஜ், சென்னை ஆனந்தியம்மாள், டாஸ்மாக் சங்க பொதுசெயலாளர் தனசேகரன் உட்பட 6 பேர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில்தான் கோவன் மீது தேசதுரோக வழக்கு போடப்பட்டு நீதிமன்றம் கண்டித்த நிலையில் தற்போது 6 பேர் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.