டெங்கு காய்ச்சலுக்கு சிறுமிகள் முதல் முதியவர் வரை பலியாகும் சோகம் - பீதிக்கு ஆளாகும் மக்கள்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை உயிரிழந்து வரும் சம்பவம் பொதுமக்களை பீதிக்கு ஆளாக்கியுள்ளது.
சென்னை: பச்சிளம் குழந்தைகள், இளம் பெண்கள், வயதான முதியவர்கள் என வயது வித்தியாசம் பார்க்காமல் பாதித்து பலி கொண்டு வருகிறது டெங்கு காய்ச்சல்.
டெங்குவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அச்சம் வேண்டாம் என்று அரசு சொன்னாலும் தொடரும் டெங்கு மரணங்கள் மக்களை பீதிக்கு ஆளாக்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் 6 பேர் மரணமமடைந்தனர்.
தமிழகம், புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வார இறுதியில், காய்ச்சல் கண்டுள்ள சுமார் 11,000 நோயாளிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 200 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

சென்னையில் டெங்கு பாதிப்பு
சென்னையில் மட்டும் 1,500 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் காய்ச்சல் காரணமாக 100 படுக்கை கொண்ட சிறப்பு வார்டில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொறியியல் மாணவி மரணம்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொறியியல் மாணவி உயிரிழந்துள்ளார். சென்னை பூவிருந்தவல்லியைச் சேர்ந்த ஷெரின்பானு பேரூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

3 சிறுமிகள் மரணம்
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோகிலா என்ற 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சேலம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 7 வயது சிறுமிகள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மூதாட்டி மரணம்
தஞ்சையில் டெங்கு பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த சாந்தாபாய்,75 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடரும் பலி
டெங்கு பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கொசு இனப்பெருக்க இடங்களைச் சுத்தம் செய்வதற்காக சுமார் 35,000 தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் பணியில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கின்றன. ஆனாலும் டெங்கு மரணபலிகள் தொடர்கதையாகி வருகின்றன.

குவியும் நோயாளிகள்
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வேலைப் பளு அதிகரித்ததோடு மன உளைச்சலும் ஏற்படுகிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவு
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கான உரிய சிகிச்சை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications