அவசர சட்டம் எங்களுக்கு தேவையில்லை.. கொட்டும் மழையில் குமுறும் தூங்கா நகர மக்கள்
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 6வது நாளாக மதுரை தமுக்கம் மைதானத்தில் எழுச்சி போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மதுரை தமுக்கம் மைதானம் முன் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை தொடங்கினர். சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விடிய விடிய இடைவிடாது நடைபெற்று வரும் போராட்டம் 6வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகின்றனர். மழை பெய்தாலும் கூட கூட்டம் அதிகரிக்கவே செய்தது. பொதுமக்கள் குடை பிடித்தபடி மழையில் நனைந்து கொண்டே போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இதனால் தமுக்கம் மைதானமே திருவிழா கோலம் பூண்டது. சிலம்பம், பறையாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக இணைந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா மற்றும் அரசுகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பினர்.
ஜல்லிக்கட்டு மாட்டை பற்றிய பிரச்சனை அல்ல. நாட்டை பற்றிய பிரச்சனை. எங்களுக்கு தேவை ஜல்லிக்கட்டு போன்ற வாசகங்கள் அடங்கிய பல்வேறு பதாகைகளை இளைஞர்கள் போராட்டத்தில் ஏந்தி வந்தனர். மதுரையை திணறடித்து வரும் இளைஞர்கள் போராட்டத்தால் கோரிப்பாளையம், தல்லாகுளம் பகுதி ஸ்தம்பித்துள்ளது.
இதனிடையே தமுக்கம் மைதானத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் சிலர் கூறுகையில், அவசர சட்டம் எங்களுக்கு தேவையில்லை. ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர சட்டம் கொண்டும் வரும் வரை எங்களது போராட்டம் ஓயாது எனக் கூறினர். நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள நிலையில் மதுரையில் தொடர் போராட்டம் நடந்து வருவது எந்தமாதிரி தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications