பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு- அடுத்தவாரம் தீர்ப்பு
கோவை: ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் மீதான தீர்ப்பு ஏப்ரல் 25-க்குள் வெளியாகும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்று வரும் மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கலந்துகொண்டார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கில் 25-ம் தேதிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், ஊழல் மற்றும் பாலியல் வழக்குகளை 3 முதல் 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜராகி வாதிட்ட அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையென்று கூறினார்.
ஆனால் இவ்விவகாரத்தில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கே அதிகாரம் உள்ளது என்ற வாதத்தை தமிழக அரசு வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வலியுறுத்தினார். மத்திய, மாநில அரசு வாதம் முடிவடைந்ததால் உச்சநீதிமன்றம் இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒருவாரத்திற்குள் வழங்கப்படும் என்று நீதிபதி சதாசிவம் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஏப்ரல் 25-ம் தேதியுடன் சதாசிவம் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications