நாமக்கல்லில் கொடுரம்..: 70 வயது மூதாட்டி கூட்டு பலாத்காரம் செய்து கொலை!
சேலம்: நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் அருகே மர்மநபர்களால் கூட்டாக பலாத்காரம் செய்யப்பட்ட 70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மூதாட்டியின் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாஜலம் மனைவி ராமாயி, 70. கணவனை இழந்த இவர், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகில், சமத்துவபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழைய கட்டடத்தில், தன் அண்ணன் ராமசாமியுடன் வசித்து வந்தார்.

கூலித்தொழிலாளியான ராமசாமி செவ்வாய்கிழமையன்று வெளியூர் சென்றுவிட்டார். நேற்று காலை, அவ்வழியாக சென்ற பகுதிவாசிகள், ராமாயி முனகல் சத்தம் கேட்டு சென்று பார்த்தனர். அங்கு, அவர் உடைகள் கிழிக்கப்பட்டு, ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். விசாரித்தபோது, தன்னை அடையாளம் தெரியாத சிலர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறிவிட்டு மயங்கிவிட்டார்.
மயக்கமடைந்த மூதாட்டியை அப்பகுதி மக்கள், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து வெண்ணாத்தூர் காவல்நிலைய காவல்துறையினர் 174 பிரிவின் கீழ் (மர்மமரணம்) விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வயதான மூதாட்டிகள் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு 80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டார். 2013ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி அதேபோல 55 வயது பெண் 35 வயது நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications