கோடநாட்டில் விழாவில் 7000 திமுக, பாஜக, காங்.நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் குன்னூர் சட்டமன்றத் தொகுதிகளில் திமுக, காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்டவற்றில் பணியாற்றி வரும் 7,076 பேர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தனர்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான டாக்டர் எம்.ஜி.ஆர்.- ன் 97 வது பிறந்த நாள் கோத்தகிரி டானிங்டனில் நடைபெற்றது.
அப்போது, எம்.ஜி.ஆர். அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பிறந்த நாள்விழா சிறப்பு மலரை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டு இனிப்பு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம், பந்தலூர் ஒன்றிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவரும், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.வி.பவிலோஸ் தலைமையில் 1,500 பேர்களும், காங்கிரஸ் கட்சியின் பந்தலூர் வட்டார இளைஞர் அணி முன்னாள் தலைவர் எம்.வி.ஜான்சன் தலைமையில் 1,000 பேர்களும், பந்தலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பேராசிரியர் பிஜீ இலியாஸ் தலைமையில் 300 பேர்களும் அதிமுக-வில் இணைந்தனர்.
அதே போல, கூடலூர் ஒன்றியம், காங்கிரஸ் கட்சியின் ஓவேலி பஞ்சாயத்து கமிட்டி முன்னாள் தலைவரும், ஓவேலி பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவரும், முதலாவது வார்டு உறுப்பினருமான எம்.கே.ஷாஜி தலைமையில் 2,250 பேர்களும்அதிமுகவில் இணைந்தனர்.
கூடலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாடந்துரை அப்துல் பஷீர்தலைமையில் 400 பேர்களும், திமுகவைச் சேர்ந்த போஸ்பரா கிளைச் செயலாளர் ரெஜூ தலைமையில் 500 பேர்களும், கூடலூர் நகரத்தைச் சேர்ந்த, பா.ஜ.க_வின் மாவட்டபிரச்சார அணி முன்னாள் தலைவர் முத்து தலைமையில் 300 பேர்களும், கூடலூர்நகர மன்ற 2_ஆவது வார்டு சுயேட்சை உறுப்பினர் வாசுதேவன் தலைமையில் 200 பேர்களும் அதிமுக-வில் இணைந்தனர்.
மேலும், முன்னாள் அமைச்சரும், நீலகிரி மாவட்ட திமுக செயலாளரும், குன்னூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இளித்துரை ராமச்சந்திரனின் உடன்பிறந்த சகோதரர் கா. கணேசமூர்த்தி தலைமையில் 425 பேர்களும், திமுக -வைச் சேர்ந்த கோத்தகிரி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர் எம். மாரிமுத்து தலைமையில் 200 பேர்களும், சிதம்பரம் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வி. குழந்தைவேலு உள்ளிட்ட 7,075 பேர் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்த முதல்வர்ஜெயலலிதா, அவர்களுக்கான கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கினார்.