ராஜா முத்தையா செட்டியாரின் சிலையின் தலையில் கேக் வெட்டி மருத்துவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்
சிதம்பரம்: ராஜா முத்தையா செட்டியாரின் சிலையின் தலையில் வைத்து கேக் வெட்டிய மருத்துவர்களின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
Recommended Video
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.
இதில் ராஜா முத்தையா பல் மருத்துவமனை அருகே அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனர் ராஜா முத்தையா செட்டியாரின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பயிற்சி மருத்துவர்
இந்த நிலையில் பல் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவருடன் படிக்கும் 10-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள், பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்தனர்.

ராஜா முத்தையா செட்டியார்
அதன்படி அந்த பல் மருத்துவமனை அருகே இருந்த ராஜா முத்தையா செட்டியார் சிலையின் தலையில் கேக்கை வைத்து வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தினர்
இதையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனர் ராஜா முத்தையா செட்டியாரின் சிலையை அவமதிப்பு செய்ததாக பயிற்சி மருத்துவர்கள் 8 பேரை பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.

சிலை அவமதிப்பு
மேலும் ராஜா முத்தையா செட்டியாரின் சிலையை அவமதித்ததற்கு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே இடைநீக்கம் செய்யப்பட்ட பல் மருத்துவர்கள் 8 பேரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கேக் வெட்டியது
அந்த வீடியோவில் அவர்கள் பேசுகையில் நாங்கள் அவ்வாறு கேக் வெட்டியது தவறுதான். எங்களை மன்னித்துவிடுங்கள் என கெஞ்சியுள்ளனர். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இவர்களது மன்னிப்பு வீடியோ குறித்து பல்கலைக்கழகம் எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்கும் என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications