வாகனங்களை மடக்கி “கல்லா கட்டிய” போலீசார் 9 பேர் அதிரடி மாற்றம்!
சேலம்: சேலத்தில் வாகனங்களை மடக்கி மாமூல் வசூலித்த ஹைவே பேட்ரோல் போலீஸார் ஒன்பது பேர் வேறு மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை பாதுகாப்பு மற்றும் மீட்பு பிரிவில் பணியாற்றும் போலீஸார் சாலைகளில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி மாமூல் வசூலிப்பதாக புகார் வந்தது.
அதனைத் தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி. சங்கர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஹைவே பேட்ரோல் போலீஸார் வாகன ஓட்டுனர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

கடந்த வாரத்தில் ஓமலூர் ஹைவே போலீஸார் வாகனங்களை சாலையில் நிறுத்தி அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிக்கொண்டிருந்த சம்பவத்தை அவ்வழியாக சென்ற டி.ஐ.ஜி. வித்யா குல்கர்னி நேரில் பார்த்து விட்டு இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சேலம் எஸ்.பிக்கு உத்தரவிட்டார்.
இதே போல வைகுந்தம் பகுதியில் சிறப்பு எஸ்.ஐக்கள் கந்தசாமி, சிவாஜி, திருமூர்த்தி, மணிமேகலன், ஏட்டுக்கள் மதியழகன், ஞானசேகரன் ஆகியோர் மாமூல் வசூலித்த காட்சியை செல்போனில் பதிவு செய்த லாரி டிரைவர்கள் அதை எஸ்.பிக்கு வாட்ஸ் அப் மூலமாக அனுப்பியுள்ளனர்.
இதை தொடர்ந்து ஓமலூர் ஹைவே பிரிவை சேர்ந்த சிறப்பு எஸ்.ஐக்கள் சின்ராஜ் ,கருணாநிதி, போலீஸ்காரர் ரவி உட்பட மாமூல் வசூலில் ஈடுபட்ட ஒன்பது பேர் தர்மபுரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த சிறப்பு எஸ்.ஐக்கள் மாதேஸ், காமராஜ், ஏட்டுக்கள் பாலமுருகன், வெங்கடாசலம். இந்த நால்வரும் வாகன சோதனை பெயரில் கல்லூரி மாணவர் பைக்கை மடக்கி 500 ரூபாய் மாமூல் வசூலித்தது குறித்து ஆதாரத்துடன் புகார் சென்றது.
இதைத்தொடர்ந்து இவர்கள் நால்வரையும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு அதிரடியாக மாற்றம் செய்து டி.ஐ.ஜி.வித்யாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications