9 மணல் குவாரிகள் திடுதிப்புன்னு மூடல்… 10 லட்சம் கட்டுமானத் தொழிலாளர் வேலை இழக்கும் அபாயம்
தமிழகத்தில் உள்ள 9 மணல் குவாரிகள் திடீரென்று நேற்று மூடப்பட்டுள்ளன. இதனால் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள 9 மணல் குவாரிகள் திடீரென நேற்று மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் செயற்கையான விலை ஏற்றம் ஏற்படும் என்று அஞ்சப்பட்ட நிலையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 4 மணல் குவாரிகளும், கரூர் மாவட்டத்தில் 2 குவாரிகளும், அரியலூரில் 2 குவாரிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 1 குவாரியும் திடீரென மூடப்பட்டன. இதனால் மணல் ஏற்றுவதற்காகச் சென்ற லாரிகள் வெளியேற்றப்பட்டன.
தமிழகத்தில் மணல் குவாரிகள் 2 வது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளதால் கட்டுமான தொழிலாளர்கள் 10 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

9 மணல் குவாரிகள்
காவிரி, கொல்லிடம், தென்பெண்ணை உள்ளிட்ட ஆற்றுப் பகுதிகளே மணல் உற்பத்தி இடங்களாக உள்ளன. திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் உள்ளிட்ட 38 இடங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் எண்ணிக்கை நீதிமன்ற நடவடிக்கைளால் 9ஆக குறைந்துள்ளன.

விலை ஏற்றம்
இதனால் ஒரு லோடு மணல் விலை 18 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்தது. இருந்தாலும் மணலுக்கான தேவை குறைந்த பாடில்லை. நாள் தோறும் 50 ஆயிரம் லோடு மணல் தேவைப்படும் நிலையில் 25 சதவீதத்தைக் கூட நிறைவேற்ற முடியாக நிலை தொடர்கிறது.

வேலை இழப்பு
இந்நிலையில், இயங்கிக் கொண்டிருக்கும் 9 குவாரிகளும் சனிக்கிழமை திடீரென மூடப்பட்டன. இதனால் கட்டுமானப் பணிகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பணிகள் தொடர்பாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மீண்டும் திறக்க..
குவாரிகள் மூடப்பட்டுள்ளதால், 60 சதவீதம் கட்டுமானத் தொழில் நின்றுவிட்டது என்றும் இதனால் மணல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் மணல் லாரி உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், மூடப்பட்ட குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications