விழுப்புரம் சிறுவன் கொலை: முக்கிய குற்றவாளியை பொறி வைத்து பிடித்த காவல்துறை
திருக்கோவிலூர் அருகே 9 வயது சிறுவனை கொன்ற கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்து, 9 வயது சிறுவனை கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருக்கோவிலூர் அருகே வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி ஆராயி. இவரது 14 வயது மகள், 8 வயது மகன் சமயன் ஆகியோர் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது வந்த மர்ம நபர்கள் இவர்கள் மீது தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் சிறுவன் சமயன் பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயங்களுடன் மயங்கி விழுந்த தாயும், மகளும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக அரகண்டநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, திருக்காவிலூர் டிஎஸ்பி அசோக்குமார், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி வீமராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.
அப்போது, இந்த சம்பவம் போலவே இதற்கு முன்னர் 2 குடும்பங்கள் இதேபோன்று தாக்கப்பட்டு காயமடைந்ததும், அருகில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்திலும் இது போலவே சம்பவம் நடைபெற்றதையும் அறிந்த போலீஸார் கடும் அதிர்ச்சியுற்றனர்.
எனவே சிறுவன் சமயன் வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
ஊருக்குள் வந்த சந்தேகப்படும்படியான நபர்கள், வெளியூரில் தங்கி வேலை செய்வோர், புதிதாக ஊருக்குள் வந்து சென்றோர் என 300-க்கும் மேற்பட்டோரை காவல்துறை தனது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது. அதுமட்டுமல்லாமல், நாமக்கல், கடலூர், சென்னை, போன்ற ஊர்களுக்கும் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்த தாக்குதல் சம்பவம் போன்றே இதற்கு முன்பு நடைபெற்ற சம்பவ வழக்குகளில் சிக்கியவர்களின் பட்டியலையும் வைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது. எனினும் சிறுவன் கொலை சம்பந்தமாக எந்த துப்பும் கிடைக்காமல் திணறி வந்தனர்.
கடைசியாக, குற்றவாளியை பிடிக்க சைபர் கிரைம் போலீஸாரின் உதவியை நாடியது காவல்துறை. பல்வேறு கட்ட புலன்விசாரணைக்கு பிறகு, குறிப்பிடும்படியாக துப்பு கிடைத்திருப்பதாகவும், குற்றவாளியை ஓரிரு நாளில் கைது செய்ய வாய்ப்பிருப்பதாகவும், போலீஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சிறுவன் சமயனை கொன்றதாக புவனகிரியை சேர்ந்த தில்லைநாதன் என்பவரை இன்று காலை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 1 மாதகாலமாக சிறுவன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கொலையாளி பிடிபட்டுள்ளான்.