ஆர்கே.நகரில் அமைச்சரே பணம் பட்டுவா.. போலீஸ் குடியிருப்புகளில் பதுக்கல் - மதுசூதனன் 'திடுக்' தகவல்
ஆர்கே.நகரில் அமைச்சரே பணம் பட்டுவா செய்வதாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரான மதுசூதனன் பரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஆர்கே.நகரில் அமைச்சரே பணம் பட்டுவா செய்வதாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரான மதுசூதனன் பரப்பு குற்றம்சாட்டியுள்ளார். போலீஸ் குடியிருப்புகளில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கப்பட்டிருப்பதாகவும் மதுசூதனன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனனும், அதிமுக அம்மா கட்சி சார்பில் டிடிவி. தினகரனும் போட்டியிடுகின்றனர். இரு தரப்பினரும் ஆர்.கே.நகரில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா வேட்பாளரான மதுசூதனன் பிரசாரத்துக்கு இடையே நிருபர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் ஒருவரே ஆர்கே.நகரில் பணப்பட்டுவாடா செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். அவர் மேலும் பேசியதாவது,
குடும்பத்தை வெளியேற்றவே போராட்டம்
ஆர்.கே.நகர் தொகுதியில் புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் ஆதரவும், மக்கள் ஆதரவும் எனக்குத்தான் உள்ளது. கட்சி, ஆட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தை வெளியேற்றவே நாங்கள் போராடி வருகிறோம்.
சசிகலா மீது வெறுப்பில் உள்ளனர்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் சசிகலா மீது வெறுப்பில் உள்ளனர். அதனால்தான் தினகரனின் ஆட்கள் சசிகலா படத்தை காண்பித்து ஓட்டு கேட்க தயங்குகிறார்கள். பணத்தை நம்பியே அவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள்.
போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் பணம் பதுக்கல்
இதற்காக போலீஸ் அதிகாரிகள் வீடுகளிலேயே கட்டுக்கட்டாக பணம் பதுக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் காலியாக கிடக்கும் வீடுகளில் வெளி ஆட்களை தங்க வைத்து இந்த பணத்தை வினியோகம் செய்யப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.
அமைச்சர் ஒருவர் ஏற்பாடு
ஒரு அமைச்சரே இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். எங்கள் தொண்டர்கள் அதை முறியடிப்பார்கள். பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கலாம் என்ற எண்ணம் இந்த தேர்தலில் எடுபடாது. இவ்வாறு மதுசூதனன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.