கருத்தடை ஆபரேசனில் மனைவி மரணம்–கணவர் தற்கொலை: 2 டாக்டர்கள் கைது
சென்னை: திருத்தணியில் கருத்தடை ஆபரேசனில் மனைவி உயிரிழந்துவிட்டதால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி ம.பொ.சி. சாலையில் வசித்து வந்தவர் ராஜேஷ்குமார். வீட்டின் கீழ்ப்பகுதியில் நகை கடை வைத்திருந்தார். இவரது மனைவி டிம்பிள். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி திருத்தணி ஆலமரம் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருத்தடை ஆபரேசன் செய்வதற்காக டிம்பிள் சென்றார். சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து மருத்துவமனை மீதும், சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சமாதான பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை ராஜேஷ்குமார் திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த 4 பக்க கடிதத்தை போலீசார் கைபற்றினர்.
அதில் மனைவி டிம்பிளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை டாக்டர்கள் 3 பேர் மீது குற்றம் சாட்டியிருந்தார். மேலும் மர்ம நபர்கள் சிலர் தனது குடும்பத்தை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறி இருந்தார்.
இதுபற்றி தெரிந்ததும் ராஜேஷ்குமாரின் உறவினர்கள் ஏராளமானோர் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்.டி.ஓ.பாண்டியன், தாசில்தார் உதயக்குமார் மற்றும் போலீசார் அவர்களை சமாதானம் பேசி கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு பிரேத பரிசோதனை முடிந்து ராஜேஷ்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரவே உடலை உறவினர்கள் தகனம் செய்தனர்.
இதற்கிடையே டிம்பிளுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் டாக்டர் ரகுராம் அவரது மகன் டாக்டர் கிரண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் கிரணின் மனைவி டாக்டர் அனுபமாஸ்ரீயை போலீசார் தேடி வருகிறார்கள்.
கைதான ரகுராம் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டீனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தலைமறைவான அனுபமாஸ்ரீ, பலியான டிம்பிளுக்கு கருத்தடை ஆபரேசன் செய்ததாக கூறப்படுகிறது.