”எத்தனை அம்மாக்கள் தெரியுமா நயன்தாராவிற்கு?”
தேனி: முட்புதர்களுக்குள் கிடந்து தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நயன்தாரா என பெயரிடப்பட்ட குழந்தை கிராமத்து தாய்மார்களின் கருணையால் தாய்ப்பால் குடித்து வளர்கிறது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி அருகே சில நாட்களுக்கு முன் அழகிய பெண் குழந்தையை பெண் ஒருவர் முட்புதருக்குள் வீசிச் சென்று விட்டார். அந்த குழந்தையை மீட்ட மருத்துவமனை ஊழியர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து இன்குபேட்டரில் பாதுகாத்தனர்.
குழந்தை பசும்பால் குடிக்க மறுத்து உடல்நிலை மோசமானது. அங்கு குழந்தை பெற்ற மற்ற தாய்மார்களிடம் இதுகுறித்து பேசிய நிலைய மருத்துவ அலுவலர் ராதா "தாய்ப்பால் கொடுக்க முடியுமா" எனக் கேட்டார்.
அங்கிருந்த எல்லா தாய்மார்களும் அதற்கு முன்வந்தனர். குழந்தைக்கு பசி எடுக்கும் போது ஒவ்வொரு தாயும் பாலூட்டி வருகின்றனர். தாய்ப்பால் குடித்து கொழு கொழு என வளர்ந்துள்ள அந்த குழந்தைக்கு "நயன்தாரா" என பெயரிட்டனர்.
குழந்தை நன்றாக வளர்ந்த பின் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க போவதாகவும், தாய்ப்பால் கொடுத்த தாய்மார்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் டாக்டர் ராதா தெரிவித்தார். கிராமத்து பெண்களின் மனித நேயத்தால் ஆதரவற்ற குழந்தை உயிர் பெற்றுள்ளது.