இந்த கொடூரர்களை தூக்கில் போட்டால் கூட குறைந்த தண்டனைதான்!
Recommended Video
சேலம்: "எப்ப பார்த்தாலும் இருமல் சத்தம்.. உன் தொல்லை தாங்கவே முடியலையே" என்று ஆத்திரமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் நோயாளி பாட்டியை தூக்கி வெளியில் வீசி எறிந்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரை சேர்ந்தவர் மேரி இவருக்கு வயது 70. இவருக்கு நீண்ட நாட்களாக ஆஸ்துமா தொந்தரவு உள்ளது. இதனால் தனது நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். மேரியின் சகோதரி சேலத்தில் உள்ளார். அவரை பார்க்க மேரி வந்திருந்தார்.
இரவெல்லாம் இருமல்
வந்த இடத்தில் ஆஸ்துமா தொல்லை அதிகமாகி விட்டது. இதனால் உறவினர்கள் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். வயது மற்றும் ஆஸ்துமாவின் தீவிரத்தால் பாட்டிக்கு இருமல் அதிகமாகி கொண்டே வந்தது. நேற்றிரவு முழுவதும் விடாமல் தொடந்து இருமிக் கொண்டே இருந்தார்.
வீசி எறிந்தனர்
இதனால் அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் எரிச்சலானார்கள்.. ஆத்திரமடைந்தார்கள்... கோபமடைந்தார்கள்... எப்ப பார்த்தாலும் இப்படியே இருமிட்டு இருந்தா என்ன அர்த்தம்? நாங்க எப்படி வேலை பாக்கறது? என்று பாட்டியை திட்டியபடியே ஆஸ்பத்திரிக்கு வெளியே உள்ள சைக்கிள் ஸ்டேண்டில் வீசிவிட்டு சென்றுவிட்டார்கள்.
தீவிர சிகிச்சை
நள்ளிரவில் இப்படி தூக்கி எறிந்துவிட்டதால் பாட்டியால் எழுந்து நடக்கவும் முடியவில்லை. இரவெல்லாம் கதறி அழுதார். காலையில்தான் பாட்டியின் நிலைமை பொதுமக்களுக்கு தெரியவந்தது. பதறியடித்த பொதுமக்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இப்போது பாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தப்பே இல்லை
ஆனால் பாட்டியை இப்படி மனசாட்சியே இல்லாமல் தூக்கி வெளியில் எறிந்த ஊழியர்கள் யார் என இதுவரை தெரியவில்லையாம். எனவே இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது... யார் என்று அடையாளம் தெரிந்தால் அவர்களுக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் வகையிலான கடுமையான நடவடிக்கை எடுத்தால் கூட தப்பே இல்லை.