தென்காசியில் மகனுக்கு கிடைத்த பொங்கல் பரிசு.. ரேஷன் கடையில் எந்த தந்தையும் செய்யக்கூடாத காரியம்
தென்காசி: பொங்கல் பரிசு தொகையாக ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 3000 வழங்கப்பட்டுள்ளது. அம்மா அப்பா தனியாக இருந்தால் 3000 ரூபாயும், மகன் மருமகள் தனியாக இருந்தால் 3000 ரூபாயும், இன்னொரு மகன் மருமகள் தனியாக இருந்தால் அவர்களுக்கு 3000 என வழங்கப்படுகிறது. இந்நிலையில் தென்காசியில் முதல் மனைவியின் மகனுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி ரேஷன் கடையில் இருந்த கைரேகை எந்திரத்தை தூக்கிச் சென்றுள்ளார்.
பொங்கல் பரிசு இன்றைக்கு பலரும் பெற்றுவிட்டார்கள், சுமார் 90 சதவீதம் பேர் வரை பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. கைரேகை பதிய முடியாதவர்களுக்கு கண் கருவிழி ரேகை மூலமாகவும் பதிவு செய்து ரொக்கப்பரிசு 3000 வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டை பொறுத்தவரை கார்டில் பெயர் உள்ள யார் போனாலும் 3000 வழங்கப்படும். அப்படி வழங்கப்படுவதால் குடும்பத்தில் கணவன் மனைவி மற்றும் பிள்ளைகள் என யாராவது போய் பணம் வாங்கிவிடுகிறார்கள். அப்படித்தான் தென்காசியில் முதல் மனைவியின் மகனுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி ரேஷன் கடையில் இருந்த கைரேகை எந்திரத்தை தூக்கிச் சென்றுள்ளார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த 42 வயதாகும் ரமேஷ் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறர். இவரது முதல் மனைவி மூக்கம்மாள். இவர்களது மகன் சூர்யாவுக்கு 17 வயது ஆகிறது..
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூக்கம்மாள் இறந்து விட்டார். இதனால் ரமேஷ், மகாலட்சுமி (35) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார். சூர்யா தனது தாத்தா லிங்கத்துரையுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ரமேஷ் தனது மனைவி மகாலட்சுமியுடன் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த விற்பனையாளர் ராசுக்குட்டியிடம் பரிசு தொகுப்பு குறித்து ரமேஷ் கேட்டாராம். அப்போது, உங்களது மகன் ஏற்கனவே டோக்கனை கொடுத்துவிட்டு பரிசு தொகுப்பை வாங்கி சென்றுவிட்டார் என கூறினாராம். அதாவது, ஸ்மார்ட் கார்டில் சூர்யாவின் பெயர் இருந்ததால் அவரிடம் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், மகாலட்சுமி ஆகியோர் விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அங்கிருந்த பொதுமக்கள் சமாதானம் செய்ய முயன்றனர்.
ஆனால் ஆத்திரம் தீராத அவர்கள், ரேஷன் கடையில் பொதுமக்கள் கைரேகை வைக்கும் எந்திரத்தை தூக்கிச் சென்றுவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன் பரிசு தொகுப்பு வழங்குவதும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து ராசுக்குட்டி ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆடிவேல், தம்பதி மீது வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி ரமேசை கைது செய்தனர்.பின்னர் கைரேகை எந்திரம் ரேஷன் கடையில் ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ஆலங்குளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications